முகமூடி அணிந்த இஸ்ரேலிய குடியேறிகள் முதியவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன முதியவர் மீது தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் முகமூடி அணிந்த இஸ்ரேலிய குடியேறிகள் சிலர் 67 வயது பாலஸ்தீனிய முதியவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவமானது கடந்த வியாழக்கிழமை டெய்ர் ஷராப் என்ற கிராமத்தில் உள்ள நாற்று பண்ணையில் நடைபெற்றுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர் 67 வயது பாசிம் சலே யாசின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த மற்ற நபர்கள் தாக்குதல்காரர்களின் வருகையை கண்டு தப்பி ஓடிய நிலையில், பாசிம் சலே யாசினுக்கு செவித்திறன் குறைபாடு காரணமாக சக தொழிலாளிகள் எழுப்பிய எச்சரிக்கை கேட்க முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளார்.
வீடியோவில், கருப்பு தடியுடன் வந்த தாக்குதல்தாரிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது பாசிம் சலே யாசின் நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இந்த தாக்குதலில் பாசிம் சலே யாசினுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், மார்பு, முதுகு மற்றும் முகத்திலும் படு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்போது பாசிம் சலே யாசின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரிகள் பண்ணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.




