ஈரானில் வெடித்துள்ள போராட்டங்களை கட்டுப்படுத்துவதில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டம்
ஈரானில் மூன்றாவது வாரமாக அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளது.
நாட்டில் உள்ள 31 மாகாணங்களிலும் போராட்டங்கள் வெடித்து இருப்பதால் அங்கு பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான HRANA வழங்கிய தகவல் படி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்து இருப்பதாகவும், மொத்தம் 2600 பேர் வரை கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த போராட்டம் 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு ஈரானில் நடைபெறும் மிகப்பெரிய மக்கள் போராட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் எச்சரிக்கையும், ஆதரவும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில், ஈரான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் ஈரான் மக்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கி செல்கின்றனர், ஈரான் மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் வெள்ளை மாளிகை வெளியிட்ட கருத்தில், சொந்த நாட்டின் மக்கள் மீது ஈரான் வன்முறையை பயன்படுத்தினால் அமெரிக்கா அதற்கு பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளது.
ஈரானின் நீண்ட கால துயரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நாட்டின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் தலைவர்கள் கூட்டறிக்கை
ஈரானின் மக்கள் போராட்டம் மற்றும் அரசின் அடக்குமுறையை கண்டித்து பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், ஜேர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கூட்டறிக்கையில் ஈரான் அரசு சொந்த மக்களுக்கு எதிரான வன்முறையை கைவிட்டு விட்டு நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
அடிப்படை உரிமைகளுக்காக ஈரான் மக்கள் வன்முறை அடக்குமுறையை மீறி வீதியில் இறங்கி போராடும் துணிச்சல் பாராட்டிற்கு உரியது என்று பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் யுவெட் கூப்பர் கருத்து தெரிவித்துள்ளார்.




