நடிகர் விஜய் உடன் மோதாதீர்கள் – ஜனநாயகனுக்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்

2 Min Read

ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் சர்ச்சை

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படத்தை வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் உடன் மோதாதீர்கள் - ஜனநாயகனுக்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் | Congress Support Tvk Vijay For Jananayagan Censor

ஆனால் படத்தை மறுதணிக்கை செய்யப்பட உள்ளதால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், படம் 9 ஆம் திகதியன்று வெளியாகாது, திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் அரசியலில் உள்ளதால், அதன் காரணமாக மத்திய பாஜக அரசின் மறைமுக அழுத்தத்தாலே தணிக்கை சாண்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நேற்றைய தினம் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன். நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை. எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி, நடிகர்கள் சிலம்பரசன், ரவி மோகன், ஷாந்தனு, இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ்

அதேபோல் விஜய்க்கு ஆதரவாகும், மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவை மென்ஷன் செய்துள்ள கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், “ஜனநாயகன் படத்திற்கு வேண்டுமென்றே சென்சார் சான்று வழங்காமல், அதன் வெளியீட்டை தடுத்து, தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டது பாஜக” என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், “அன்புள்ள மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.

மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜய்யின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *