வெனிசுலாவில், ஒரு மாதத்திற்கு இலவச இணைய சேவை வழங்குவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
மதுரோவை சிறைப்படுத்திய அமெரிக்கா
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி, வெனிசுலா தலைநகர் கரகஸ் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைந்துள்ளது.

துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை(Delcy Rodriguez) இடைக்கால ஜனாதிபதியாக வெனிசுலா உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்த துணை புரிந்ததாக டிரம்ப் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், அங்குள்ள எண்ணெய் வளங்களை அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த செயலுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான், கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இலவச இணையம் வழங்கும் மஸ்க்

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள எலோன் மஸ்க், “கொடுங்கோல் சர்வாதிகாரியின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதை வெனிசுலா மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இனி அவர்கள் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், வெனிசுலா மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஒரு மாத காலத்திற்கு ஸ்டார்லிங்க் இணைய சேவையை அங்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா தாக்குதலால், உக்ரைனின் இணைய சேவை பாதிக்கப்பட்ட போது, அங்கு எலோன் மஸ்க் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையை வழங்கினார்.




