கனடாவின் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான குறைபாடுகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
எட்மன்டனில் உள்ள Grey Nuns Community Hospital வைத்தியசாலையில் 44 வயது இந்திய வம்சாவளி நபர் பிரஷாந்த் ஸ்ரீகுமார், 8 மணி நேரம் அவசர சிகிச்சைக்காக காத்திருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகுமார் வேலைக்குச் சென்றபோது கடுமையான மார்பு வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆரம்ப சோதனை செய்யப்பட்டாலும், சிகிச்சை அளிக்காமல் காத்திருப்பு அறையில் அமர்த்தப்பட்டார்.
வலி குறைக்க Tylenol மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டன. 8 மணி நேரம் கழித்து சிகிச்சை அறைக்குள் அழைக்கப்பட்ட சில நொடிகளில் அவர் இதயக் கோளாறால் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

அவரது மரணம் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளை பெரிதும் பாதிப்படையச்செய்துள்ளது.
இந்தச் சம்பவம் கனடாவின் அவசர சிகிச்சை வழங்கும் முறையில் உள்ள பாரிய பிழையை வெளிப்படுத்துகிறது.
“Golden Hour” எனப்படும் முதல் 60 நிமிடங்களில் சிகிச்சை அளித்தால் உயிர் காப்பாற்றும் வாய்ப்பு அதிகம். ஆனால், ஸ்ரீகுமார் 8 மணி நேரம் காத்திருந்தது சுகாதார அமைப்பின் செயலிழப்பை காட்டுகிறது.
கனடாவில் சுமார் 59 இலட்சம் மக்களுக்கு நிலையான primary care வசதி இல்லை. அவசர சந்திப்புக்காக 24 மணி நேரத்திற்குள் நேரம் கிடைப்பது 36.9 சதவீதம் பேருக்கு மட்டுமே சாத்தியமாகிறது.
மேலும், 23,000 குடும்ப மருத்துவர்கள், 28,000 பதிவு செய்யப்பட்ட நர்சுகள், ஆயிரக்கணக்கான சுகாதார நிபுணர்கள் தேவைப்படுவதாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
கனடாவில் தற்போது 1,000 பேருக்கு 2.8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இது OECD சராசரியான 3.7-க்கு மிகக் குறைவு. இதனால் நிபுணர் சந்திப்புகளுக்கான காத்திருப்பு ஒரு மாதத்திற்கும் மேலாக நீள்கிறது.
ஆயிரக்கணக்கான தகுதியான வெளிநாட்டு மருத்துவர்கள் உரிமம் பெற முடியாமல் வேலை செய்யாமல் இருப்பதும் பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது.
இந்தச் சம்பவம் கனடாவின் சுகாதார அமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.




