ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில், ரசிகர் ஒருவரை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தவெக தலைவருமான விஜய், அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், ஜன நாயகன் தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.
ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், பொங்கலை முன்னிட்டு வரும் 2026 ஜனவரி 9 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள, நேற்றே தனி விமானம் மூலம் விஜய் மலேசியா சென்றடைந்தார்.
இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், விஜய்யின் தாய் ஷோபா, சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலை பாடகர் திப்புவுடன் இணைந்து பாடினார்.
இந்த நிகழ்வில், ஏறத்தாழ 80 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டிருப்பது, அதிக பார்வையாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ரசிகர் கைது
இந்த நிகழ்விற்கு முன்னதாகவே, நிகழ்வில் அரசியல் பேசக்கூடாது, கட்சி கொடி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என மலேசிய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

விஜய் வந்ததும், ரசிகர்கள் TVK, TVK என கோஷமிட்ட நிலையில், இங்கு வேண்டாம் என சைகை மூலம் ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டார்.
இந்த நிலையில், ரசிகர் ஒருவர் மைதானத்தின் உள்ளே தவெக கொடியை காட்டியதால், கோலாலம்பூர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.




