BPL போட்டி தொடங்கும் முன்னர் பயிற்சியாளர் மைதானத்திலே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
மைதானத்தில் பயிற்சியாளர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் BPL T20 தொடர் டிசம்பர் 26 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 23 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இன்று சில்ஹெட்டில் நடைபெற்ற 3வது லீக் போட்டியில், ராஜ்ஷாஹி வாரியர்ஸ் மற்றும் டாக்கா கேபிடல்ஸ் அணிகள் மோதியது.
டாக்கா கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் 59 வயதான மஹ்பூப் அலி ஜாகி(Mahbub Ali Zaki), போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திடீரென மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள், உடனடியாக அவருக்கு CPR சிகிச்சை அளித்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக, அல் ஹரமைன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக அறிவித்தனர்.
உடனடியாக பல அணிகளை சேர்ந்த வீரர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
போட்டி திட்டமிட்டபடி நடந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் ஜாக்கிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
யார் இந்த மஹ்பூப் அலி ஜாகி?
பயிற்சியாளர் ஆவதற்கு முன்பாக வலது கை வேகப்பந்து வீச்சாளராக இருந்த மஹ்பூப் அலி ஜாகி, தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் கோமில்லா மாவட்ட அணி மற்றும் அபஹானி லிமிடெட் மற்றும் தன்மோண்டி ஆகிய கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் (BCB) உயர் செயல்திறன் பயிற்சியாளராக சேர்ந்த ஜாகி, பின்னர் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் சிறப்பு வேக பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
2016 டி20 உலகக் கோப்பையின் போது டாஸ்கின் அகமதுவின் பந்துவீச்சு சட்டவிரோதம் என புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்போது அவருடன் இணைந்து பணியாற்றியதற்காக கவனம் ஈர்த்தார்.
மஹ்பூப் அலி ஜாகிவின் மறைவிற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.




