இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இலங்கையின் சமரி அதப்பத்து தெரிவித்தார்.
ரேணுகா சிங் அபாரம்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் எடுத்தது.
சமரி அதப்பத்து (3), ஹர்ஷிதா (2) ஆகியோர் சொதப்ப, ஹாசினி பெரேரா 25 (18) ஓட்டங்களும், இமேஷா துலானி 27 (32) ஓட்டங்களும் எடுத்தனர்.
அதிரடி காட்டிய கவிஷா தில்ஹாரி 13 பந்துகளில் 20 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினார். ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஷபாலி வெர்மா ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா (1), ஜெமிமா (9) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் தொடக்க வீராங்கனை ஷபாலி வெர்மா (Shafali Verma) ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் இந்தியா 13.2 ஓவரிலேயே 115 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 18 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்தப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

சமரி அதப்பத்து
தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, “இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஒரு துடுப்பாட்ட பிரிவாக நாங்கள் நிறைய சிரமப்பட்டிருக்கிறோம். எனவே, அடுத்த உலகக்கிண்ணத்திற்கு முன்பு நாங்கள் அந்தப் பகுதியில் முன்னேற வேண்டும்.
எங்களுக்கு இருதரப்புத் தொடர்கள் வர இருக்கின்றன. எனவே, அந்த இரண்டு தொடர்களிலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.





