தூக்கத்தில் 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர், உயிர் பிழைத்துள்ளார்.
10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர்
குஜராத் மாநிலம் சூரத்தின் ஜஹாங்கிர்புராவில் ‘டைம்ஸ் கேலக்சி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 57 வயதான நிதின்பாய் ஆதியா(Nitinbhai Adiya) என்பவர் 10வது தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று காலையில் தனது வீட்டில் உள்ள ஜன்னல் அருகே தூங்கிக்கொண்டிருந்த அவர், தூக்கத்தில் நிலை தவறி 10வது மாடியில் இருந்து விழுந்துள்ளார்.
ஆனால், அவர் 8 வது தளத்தில் வெளிப்புறமாக நீட்டிக்கொண்டிருந்த ஜன்னல் கிரில் கம்பியில் சிக்கி, வலியுடன் தலைகீழாக தொங்கிகொண்டிருந்தார்.
அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்க முயற்சித்தும் மீட்க முடியவில்லை. அவர் கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தரைத்தளத்தில் வலையை விரித்தனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், தீயணைப்பு துறையினர் ஜன்னல் வழியாக கயிறு கட்டி அவரை மீட்டனர்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சீரான உடல்நலத்துடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவர் 8வது மாடியில் ஜன்னல் கம்பியில் தொங்கும் நிலையில், மீட்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




