துருக்கியில் ஏற்பட்ட விமான விபத்தில், லிபிய ராணுவத் தலைவர் ஹதாத் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி சென்ற லிபியா குழு
வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
அங்கு ஐநா, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட லிபிய தேசிய இராணுவம் இயங்கி வருகிறது.
துருக்கியின் அங்காராவில் உயர்மட்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்காக லிபியா தூதுக்குழு சென்றிருந்தது.
இந்த குழுவில் சென்ற லிபிய ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத், துருக்கி பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலர் மற்றும் துருக்கிய எதிர்தரப்பு செல்குக் பைரக்தரோக்லு மற்றும் பிற துருக்கிய இராணுவத் தளபதிகளை சந்தித்தார்.

இதனையடுத்து, ராணுவ தலைவர் ஹதாத், தரைப்படைத் தலைவர் ஜெனரல் அல்-ஃபித்தோரி கிராய்பில், இராணுவ உற்பத்தி ஆணைய தலைவர் பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூத் அல்-கடாவ் உட்பட 5 அதிகாரிகள் தனியார் விமானம் ஒன்றின் மூலம் துருக்கி தலைநகர் அங்கராவில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
விமான விபத்தில் ராணுவ தலைவர் உயிரிழப்பு
விமானம் இரவு 8;30 மணிக்கு புறப்பட்ட நிலையில், புறப்பட்ட 40 நிமிடங்களில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அங்காராவின் ஹேமனா மாவட்டத்தில் உள்ள கெசிக்காவக் கிராமத்திற்கு அருகே விமானத்தின் பாகங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில், லிபியாவின் ராணுவ தலைவர் ஹதாத் உள்ளிட்ட 5 ராணுவ அதிகாரிகள் மற்றும் 3 விமான குழுவினர் என பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
லிபியா பிரதமர் அப்துல் ஹமீத் தீப(Abdul Hamid Dbeibeh), சமூகவலைத்தள பக்கம் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.




