இரவு 10 மணி கடந்தது. பரந்தாமனும் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான். சைக்கிளை மிதிக்க மழையும் தூறல் போடத் தொடங்கியது. கடைகளின் மின்விளக்குகள் யாவும் மெது மெதுவாக அணையத் தொடங்கின. வீதிகளும் இருட்டில் மூழ்க மக்கள் நடமாட்டமும் குறையத்தொடங்கின. டோர்ச் வெளிச்சத்தில் சைக்கிளை ஏறி மிதிக்க மேடு பள்ளம் பாராது அதுவும் ஓடியது.
சற்று தூரத்தில் யாரோ நாலைந்து பேர் நிற்பதை கண்ட இவன் சைக்கிளை மெதுவாக செலுத்தினான். அங்கே 15-17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் வருவோர் போவோரை தகாத வார்த்தைகளால் அவர்களை வம்புக்கு இழுத்தபடி நின்றனர். ஒவ்வொருவரின் விரல் இடுக்குகளிலும் கொள்ளிக்கட்டை போல சிகரெட் துண்டுகள் எரிந்து கொண்டிருந்தது. உண்மையில் இவர்கள் மதுபோதையில் தான் உள்ளார்கள் என்பதை உறுதி செய்த பரந்தாமனும் சற்று விலகியே சென்றான்.
“இவர்கள் மட்டும் எங்கள் காலத்தில் இருந்திருந்தால் எல்லாருக்கும் தோல் உரிஞ்சிருக்கும்”.
“எங்க இருந்து இந்த பழக்கம் வந்தது? யார் இதை இவர்களுக்கு பழக்கி விட்டார்கள்? இந்த காலம் காலம் எப்பிடி மாறி போய் கிடக்கு? இந்த வயசில நாங்கள் தேசத்த நேசிக்க தொடங்கிற்றம். இப்ப என்னடா எண்டால் இப்பிடி சீரழிஞ்சி போகுதுகளே இந்த பிள்ளைகள்! கேள்விக் கணைகளோடு பழைய நியாபகங்கள் மீட்டிக் கொண்டு சைக்கிளை ஏறி மித்தித்தவன்
“டேய் இஞ்ச பார் உன்ர பெரியப்பன் போறான்”
“அடேய் விசரா அவன் எனக்கு பெரியப்பனும் இல்ல ஒண்டுமில்ல , அவன் எல்லாம் எனக்கு பெரியப்பன் ஆக ஏலுமா , எங்கட
சாதி என்ன? அவன்ட சாதி என்ன? நீ தேவையில்லாம கதைக்காம வாய மூடிட்டு இரு அம்மாட காதுல கேட்டா நீ துலைவ”
இவர்களின் பேச்சு அவன் காதில் விழ சிலையாகி அப்பிடியே அமைதியாகி நின்றான் பரந்தாமன். ஏனென்றால் அதில் நின்றவன் பரமனின் உயிருக்கு மேலானவன் உண்மையில் அவன் தம்பியின் மகன். குரல் தடுமாற எதுவும் இயலாதவனாய் அங்கிருந்து நகர்கின்றான்
மழைத் தூறல்களோடு அவன் கண்ணீரும் கலந்து விடுகிறது. பிள்ளையின் யோசனையில் வந்த பரந்தாமன் படலையை திறக்க அவன் பின்னால் ஒரு உருவம் கடந்து சென்றது. அதுவரை நேரமும் தன் பின்னால் வந்தது அறியாதவன் யாரோ போகிறார் என்ற நினைப்பில் செல்ல அவன் தாயும் அவனுக்காக காத்திருந்தாள்.
“என்னப்பு இவ்வளவு நேரம் எங்காத்து போனனிங்க, அப்பாவும் தேடிக்கொண்டு இருக்கிறேர். உள்ள வா மழை வேற தூறிற்று இருக்கு”
“தம்பி என்னப்பா இவ்வளவு நேரம் ”
அப்பாவும் விசாரிக்க தொடங்கினார்.
“இல்லப்பா பூட்டுற நேரத்துல ஒரு லூசன் வந்திட்டான். உங்களுக்கு தெரியும் தானே லக்மன. ஆசீர்வாதம் ஐயாட பெடியன். அவன் தான் வந்திட்டு பெரிய கத கதைச்சிட்டு இருந்தான்”
சரியப்பு நீ முதல்ல குளிச்சிட்டு வா நான் சாப்பாட்ட எடுக்கிறன். விடிய எழும்பி கதையுங்க. நேரம் போட்டுது”
“அப்பா விடிய போயிட்டு கடைய திறவுங்க பிள்ள கொஞ்சம் நித்திர கொண்டுட்டு வரட்டும்”
“சரி போறனப்பா பிள்ளைக்கு சாப்பாட் குடுத்திட்டு நீங்களும் சாப்பிடுங்க”
கிணற்றடியில் குளித்தவன் திடீரென பாதியில் வந்து டோர்ச் லைட் எடுத்து படலைப் பக்கமாக வெளிச்சத்தை திருப்ப வேலிக்கரையில் நின்ற சைக்கிள் வேகமாக செல்வதை பார்த்தான்.
“அம்மா பாடலை லைட்டை ஒருக்கா போடுங்க”
என்றவன் விறு விறு என்று படலையை திறந்து சைக்கிள் சென்ற திசையை நோக்கில் வெளிச்சத்தை பாய்ச்சினான். கடும் வேகத்தில் பறந்த சைக்கிள் எங்கோயோ சென்று மறைந்தது.
“என்னப்பு ஏதாவது பிரச்சைனையா?
“இல்லம்மா யாரோ வெளிக்கரையில நிண்டுட்டு ஓடுறாங்கள் சைக்கிள்ல யாரென்று தெரியல அது தான் ஓடி வந்து பாத்தன் அதுக்குள்ளே ஓடிட்டாங்கள்”
“எல்லாம் இந்த விசர் கூட்டங்கள் அனுப்புனதா இருக்கும் கரண்ட் இல்லாத நேரத்துல எல்லாம் எவ்வளவு நிம்மதியா இருந்தம். ஒரு கள்ளன் காவாலி இல்லாத நாட்டுல நிம்மதியா இருந்தம். வந்து சேந்திருக்கிறம் பார் நாசமா போனவனுகளோட கரண்ட் இருக்கு கள்ளன் காவாலி இருக்கு எல்லாம் இருக்கு. நிம்மதி மட்டும் மனுசருக்கு இல்ல துலஞ்சுபோவார்”
“சரி அம்மா வாங்க உள்ள மழைல நனையாம”
“சரியப்பு, உனக்கு ஒண்டு தெரியுமே நாளைக்கு விடிய அன்ரனி மாமாவையும் அவங்கட மகளையும் முகாமுக்கு கூப்பிட்டவேலாம். அன்ரனி மாமா மகள் வரமாட்டாள் நான் மட்டும் தான் வருவாள் எண்டு சொல்லி அனுப்பி விட்டவராம்”
“எதுக்கு படிக்கிற பிள்ளையை முகாமுக்கு என்ன விசாரணைக்காமோ? நாளைக்கு விடியட்டும் மாமாட்ட கதைக்கிறேன்.”
“சரியப்பு நீ வா சாப்பிட….
“என்னையும் நேற்று வர சொன்னவே நான் போகேலம்மா திரும்ப வர சொல்லுவாங்கள் போல கிடக்கு”
“என்ர கடவுளே எத்தின தடவ ராசா இன்னும் கூப்பிட போறாங்கள். நிம்மதியே இல்லாம கிடக்கு. நீ போகாத ராசா நானும் அப்பாவும் போறம். நீங்க கடைய பூட்டிடு நில்லுங்க. கேட்டா நீங்க ஆஸ்பத்திரிக்கு போயிட்டீங்க எண்டு சொல்லுறம்”
“இல்லம்மா இவனுகள் நம்ப மாட்டாங்கள். இருக்கிறன் எண்டு தெரிஞ்சா. விட்டிருவாங்கள். இல்ல எண்டா ஒருத்தரையும் விடமாட்டாங்கள். பாப்பம் எவ்வளவு நாளைக்கு எண்டு. அடிமைப்பட்டு போனம். இனி கடவுள் தான் காப்பாத்தோனும்.”
என்ர ராசா போயிடாத டா உன்னையும் துளைச்சுப்போடுவாங்கள். இந்த அம்மாவையும் கூட்டிகொண்டு போ தம்பி”
“சரி அம்மா கூப்பிடேக்க சொல்லுறன் இப்ப அழாம சாப்பிடுங்க”
தாயின் இரங்களோடு நித்திரைக்குச் சென்றவன் கண்களை மூட முடியாமல் அவதிப்பட்டான். அங்கே நின்ற சிறுவர்களில் ஒருவன் எனக்கு உரிமையானவன். ஏன் அப்படி ஒரு நிலைமைக்குச் சென்றான். என்ற அங்கலாய்ப்பில் இரவுப்பொழுதைக் கழித்தான் பரந்தாமன்.




