தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், லாவோஸ் எரிபொருள் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை மோதல்கள் இரண்டாவது வாரமாக நீடித்து வருகின்றன.
கடந்த 8 நாட்களில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தாய்லாந்து இராணுவம், லாவோஸின் சோங் மேக் எல்லைச் சாவடி வழியாக செல்லும் எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.
ஏனெனில், அந்த எரிபொருள் கம்போடிய படைகளுக்கு திருப்பி விடப்படுவதாக கிடைத்த தகவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், “லாவோஸ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல” என்று தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் Rear Admiral சுரசந்த் காங்சிரி தெரிவித்துள்ளார்.
மோதல்கள் குறைந்தது 9 இடங்களில் தொடர்கின்றன. தாய்லாந்து விமானப்படை F-16 போர் விமானங்களையும், கனரக துப்பாக்கிச் சூட்டையும் பயன்படுத்தி கம்போடியாவின் சியாம் ரீப் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது.
“தாய்லாந்து அதிக அளவில் போர் விமானங்களையும் கிளஸ்டர் குண்டுகளையும் பயன்படுத்துகிறது” என்று கம்போடிய பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் மாலி சோசெட்டா தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தற்போது கம்போடியாவுக்கு மிகப்பெரிய எரிபொருள் வழங்குநராக உள்ளது. இந்த ஆண்டு சுமார் 9.15 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது.
தாய்லாந்தின் விநியோகம் கடந்த ஆண்டின் 1.8 லட்சம் டனிலிருந்து இவ்வாண்டு 30,000 டன்களாகக் குறைந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நடத்திய போர்நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. தென்கிழக்கு ஆசிய வெளியுறவு அமைச்சர்களின் அவசரக் கூட்டம் டிசம்பர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



