வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தையின்போது நடைபெற்ற, 21 மணி நேரம் நீடித்த கடும் விவாதங்களுக்குப் பின்னரும், ஈரான் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஜேடி வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய கெட்ட செய்தி
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹொட்டலில் செய்தியாளர்களிடம் பேசிய வேன்ஸ், தற்போது 21 மணி நேரமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். ஈரானியர்களுடன் பல ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.

வருத்தமான செய்தி என்னவென்றால், நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை. மேலும், இது அமெரிக்காவிற்கு ஒரு கெட்ட செய்தி என்பதை விட, ஈரானுக்குத்தான் மிகப் பெரிய கெட்ட செய்தி என்று நான் கருதுகிறேன்.
எனவே, ஓர் உடன்பாட்டிற்கு வராமலேயே நாங்கள் அமெரிக்காவிற்குத் திரும்புகிறோம் என்றார். பொதுவெளியில் எதையும் விவாதிக்க விரும்பவில்லை என்று கூறிய வேன்ஸ், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை நிறுத்துவதற்கு உறுதியளிக்கவில்லை என்றும் விளக்கினார்.
மேலும், எங்களின் வரம்பு எவை என்பதையும், எந்தெந்த விடயங்களில் அவர்களுக்கு இடமளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும், எவற்றில் இடமளிக்கத் தயாராக இல்லை என்பதையும் நாங்கள் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்;
எங்களால் இயன்றவரை அதைத் தெள்ளத்தெளிவாகவே எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும், அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கக்கூடும் என வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பேச்சுவார்த்தைகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவை என்பது குறித்துத் துணை ஜனாதிபதி விரிவாக விளக்கவில்லை; மேலும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான கவலைகள் குறித்தும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே போரில் வெற்றி
ஆறு வார கால மோதலுக்குப் பிறகு, புதன்கிழமையன்று இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட நிலையற்ற போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று பாகிஸ்தானின் தலைநகரில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்கக் குழுவை, சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் இணைந்து துணை ஜனாதிபதி வேன்ஸ் முன்னெடுத்துள்ளார்.

ஈரானியக் குழுவிற்கு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமை தாங்கியுள்ளார். இந்த நிலையில், வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப்,
பாகிஸ்தானில் மிகவும் ஆழமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை ஒப்புக்கொண்டார், ஆனால் பேச்சுவார்த்தைகளின் முடிவு என்னவாக இருந்தாலும், அமெரிக்கா ஏற்கனவே போரில் வெற்றி பெற்றுவிட்டது என்றும் கூறினார்.




