– விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்
– பூமியிலிருந்து 252,756 மைல் தூரம் பயணம்
அமெரிக்காவின் நாசா (NASA) அமைப்பினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆர்டெமிஸ் II (Artemis II) விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், மனித வரலாற்றில் பூமியிலிருந்து அதிக தூரம் பயணித்தவர்கள் என்ற புதிய உலக சாதனையை இன்று (07) படைத்துள்ளனர்.

நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தின் கீழ் நிலவைச் சுற்றி வரச் சென்றுள்ள நான்கு விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து சுமார் 252,756 மைல்கள் (406,771 கி.மீ) தூரத்தை அடைந்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர் 1970 ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்ற அப்போலோ 13 (Apollo 13) விண்கலத்தின் வீரர்கள் 248,655 மைல்கள் (400,171 கி.மீ) தூரம் பயணித்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஆர்டெமிஸ் II அதனை முறியடித்துள்ளது.விண்வெளி வீரர்கள்: ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடாவின் ஜெர்மி ஹேன்சன் ஆகியோரே இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
நிலவின் மறுபக்கத்தைக் கடந்து சென்றபோது, வீரர்கள் நிலவின் மறைக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்ததுடன், விண்வெளியில் ஒரு முழு சூரிய கிரகணத்தையும் (Solar Eclipse) கண்டு இரசித்தனர்.
விண்கலம் தனது அதிகபட்ச தூரத்தை அடைந்துவிட்டு தற்போது வெற்றிகரமாக பூமியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பசிபிக் பெருங்கடலில் விண்கலம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இது ஒரு முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது. இது எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கும் வழியமைக்கும் என நாசா தெரிவித்துள்ளது




