பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இம்முறை ஐபிஎல் தொடரில் வெற்றி இன்றியே முதல் புள்ளியை பெற்றது.
கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 25 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே மழை இடையூறு செய்தது. தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதனை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிரப்பட்டது. கொல்கத்தா அணி இம்முறை தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நிலையிலேயே இந்தப் போட்டிக்கு மழை இடையூறு செய்தது.
மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதோடு இந்தப் போட்டியில் மேலும் ஒரு புள்ளி கிடைத்ததால் அந்த அணி மொத்த 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.




