அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் முக்கோண ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டிகளில் இலங்கை இளையோர் அணி 52 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
பிரிஸ்பேனில் நேற்று (07) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு லிமன்சா திலகரத்ன 85 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்றார். இதன்போது அவர் ஷஷினி கிம்ஹானியுடன் (35) இணைந்து 5 ஆவது விக்கெட்டுக்கு 56 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.

இதன்மூலம் இலங்கை இளையோர்கள் 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் பதிலெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர்களுக்கு இலங்கை அணித் தலைவி சமோதி பிரபோதா நெருக்கடி கொடுத்தார். 16 வயது இடது கை சுழல் வீராங்கனையான பிரபோதா 10 ஓவர்களில் 13 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அசேனி தலங்குனவும் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இதனால் ஆரம்பம் தொடக்கம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி 42.1 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கே சுருண்டது.
அடுத்து இலங்கை இளையோர்கள் இன்று (08) அவுஸ்திரேலிய அணியை இதே பிரஸ்பேன் அரங்கில் எதிர்கொள்ளவுள்ளது.




