மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு

2 Min Read

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

போர்ச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் குறிப்பாக அந்த நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

May be an image of textMay be an image of text

May be an image of the Oval Office, dais and text

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்படுவது இலங்கையின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போரில் சம்பந்தப்படாத மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தனது கவலையை தெரிவித்ததுடன், அத்தகைய தாக்குதல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறிப்பாக வலுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறைக்கும் அந்நாடுகள் வழங்கும் பங்களிப்பை இதன்போது பாராட்டினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தி செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதேபோன்று, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக தனி நாடாகவும், ஒன்றிணைந்தும், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க இலங்கை வழங்கக்கூடிய அதிகப்பட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவரும், அரபு நாட்டுத் தூதுவர்கள் கவுன்சிலின் தலைவருமான Khaled Nasser Sulaiman AlAmeri, இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் Khalid Hamoud Nasser Alkahtani, இலங்கைக்கான ஓமான் தூதுவர் Ahmed Ali Saeed Al Rashdi, இலங்கைக்கான எகிப்து தூதுவர் Adel Ibrahim, இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் Ihab I.M. Khalil மற்றும் இலங்கைக்கான கட்டார் நாட்டுத் தூதுவர் Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari, கொழும்பிலுள்ள ஈராக் தூதரகத்தின் பொறுப்பதிகாரி Anmar A.A. Al-Emin, கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தின் பதில் பொறுப்பதிகாரி Abdullah A.M.A. Almuhana மற்றும் கொழும்பிலுள்ள லிபியத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி Faek B.T. Aboud, ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *