உயர் கல்வியை வழங்குவதில் நாட்டில் அரச சார்பற்ற முன்னிலை கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Sri Lanka Institute of Information Technology – SLIIT), 2026 மார்ச் பட்டமளிப்பு வைபவத்தை வெகுசிறப்பாக நிறைவு செய்துள்ளது. பாண்டித்தியம், தலைமைத்துவம், மற்றும் சமூக ஈடுபாட்டில் அதியுயர் தராதரங்களைக் காண்பித்து சாதனை படைத்துள்ள 800 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும்
முதுகலைப் பட்டதாரிகளுக்கு இவ்வைபவத்தில் பட்டங்கள் வழங்கப்பட்டன. இப்பட்டமளிப்பு வைபவம் மாலபேயிலுள்ள SLIIT பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான கேட்போர்கூடத்தில் இரு தினங்களாக இடம்பெற்றது. மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் இடம்பெற்ற நிகழ்வில், மேடையில் ஏறி தமது பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு பட்டதாரியினதும் கடின உழைப்பு, திறமை, மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைப் போற்றிப் பாராட்டுவதற்காக மாணவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், பீடத்தினர், மற்றும் பழைய மாணவர்கள் என பெரும் திரளானோர் ஒன்றுகூடியிருந்தனர்.

மிகவும் போட்டிமிக்க தொழிற்சந்தையில் மீள்திறன், அணுகல், மற்றும் பொருத்தம் ஆகியவற்றுடன் தகைமைகளையும், விசேட நிபுணத்துவங்களையும் கொண்ட புதிய மாணவர் அணியொன்று SLIIT கல்வி நிறுவனத்தில் தமது கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளது. தமது வாழ்விலும், தொழில்களிலும், மற்றும் தம்முடைய சமூகங்கள் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை படைத்த முன்னோக்கு சிந்தனை கொண்டவர்களாக தாம் உள்ளோம் என்ற தெளிவுடன் இப்பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என துணைவேந்தர் அவர்கள் தனது உரையின் போது கேட்டுக்கொண்டார்.




