நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது குறித்து அஸ்வின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து தோல்வி
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் 127 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியுற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 210 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தும் தோல்வியடைந்தது.
இது CSK ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியதால், சமூக ஊடகங்களில் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அஸ்வின் ஆதங்கம்
அந்த வகையில், ரசிகர்களைப் போலவே ரவிச்சந்திரன் அஸ்வினும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், “CSK அணியைப் பார்க்கும்போது எனக்கு மனது உண்மையிலேயே வலிக்கிறது. இது எப்பேர்ப்பட்ட அணி தெரியுமா? எவ்வளவு புகழ்பெற்ற அணி தெரியுமா? நான் விளையாடிய காலத்தில் இந்த அணி எவ்வாறு செயல்பட்டது தெரியுமா?
ஆனால் இப்போது எப்படி இருக்கிறது. இதைப் பார்க்கும்போது உண்மையிலேயே என்னால் தாங்க முடியவில்லை. சென்னை அணி விளையாடும்போது 12வது ஓவரிலேயே வீரர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். அவ்வளவு ஏன்..முதல் இரண்டு பந்திலேயே போட்டி எவ்வாறு மாறப்போகிறது என்பதை நான் புரிந்துகொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை அணி சம்பந்தமே இல்லாமல் இளம் வீரர்களுக்கு அதிக பணத்தை கொடுத்துள்ளது என்றும், பிரேவிஸ் சென்னை அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நம்பிக்கை இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 106 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார்.





