இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் நகரில், 4,000 கிலோகிராம் கலப்பட இஞ்சி பூண்டு விழுதை பொலிசார் பறிமுதல் செய்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
4,000 கிலோகிராம் கலப்பட இஞ்சி பூண்டு விழுது
ஹைதராபாதில், இஞ்சி பூண்டு விழுது தயாரிக்கும் SKR Food Products என்னும் நிறுவனத்தில் உணவு கலப்பட கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளார்கள்.
அப்போது, அங்கு சுகாதாரமற்ற முறையில் இஞ்சி பூண்டு விழுது தயாரிக்கப்படுவதும், திறந்த பாத்திரங்களில் விழுது வைக்கப்பட்டிருப்பதும், அசிட்டிக் அமிலம் முதலான சில ரசாயனங்கள் கலக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 4,000 கிலோகிராம் எடையுள்ள இஞ்சி பூண்டு விழுதையும், மூலப்பொருட்களையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளார்கள்.
நிறுவன உரிமையாளரான ஹடன் அலி ரூபானி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலப்படம் மட்டுமின்றி, அவர் இஞ்சி பூண்டு விழுது தயாரிக்க முறைப்படி உணவு பாதுகாப்பு சான்றிதழும் பெறவில்லை.
இது மட்டுமின்றி, ஹைதராபாத் நகரில் அதிகாரிகள் நடத்திய ரெய்டுகளில், கெட்டுப்போன கோழி இறைச்சி, காலாவதியான, தரமற்ற உட்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம், கேக், பன் தயாரிக்க அழுகிய முட்டைகள், கலப்பட பனீர், நெய், கோவா, ஊறுகாய், பால், தயிர் மற்றும் மஞ்சள் மற்றும் மிளகாய்ப்பொடி ஆகிய பொருட்களும் சிக்கியுள்ளன.




