விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில், இளைஞர் ஒருவர் 9 கி.மீ தூரத்திற்கு தண்டவத் யாத்திரை சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
விவாகரத்து கிடைக்க வேண்டுதல்
உத்தரப்பிரதேச மாநிலம் பஷ்டியை சேர்ந்த 26 வயது இளைஞரான லோகேஷ் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் திருமணவாழ்வின் ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, லோகேஷ் தீவிர மனஅழுத்தத்திற்கு ஆளாகினர்.
இதன் காரணமாக விவாகரத்து பெற விரும்பிய லோகேஷ், பான்பூரில் உள்ள பத்வா மாதா கோவிலுக்குச் சென்று தனது திருமண வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்தால் வீட்டில் இருந்து கோவிலுக்கு தண்டவத் யாத்திரை(dandvat yatra) மேற்கொள்வதாக வேண்டிக்கொண்டார்.
9 கிமீ தண்டவத் யாத்திரை
2 ஆண்டுகளாக நடைபெற வழக்கு முடிவடைந்து தற்போது விவாகரத்து கிடைத்துள்ள நிலையில், காலையில் 6 மணிக்கு நீர் கூட அருந்தாமல் தரையில் படுத்தவாறே தனது வேண்டுதலை நிறைவேற்ற தொடங்கினார்.

அவருடன் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி வந்தனர்.
மாலை 6 மணியளவில் 9 கிலோ மீட்டர் தூரம் தண்டவத் யாத்திரை செய்து கோவிலை வந்தடைந்து கடவுளை வணங்கி நன்றி தெரிவித்தார்.

மிகுந்த களைப்புடன் இருந்த அவரது முழங்காலில் இருந்து ரத்தம் வழிந்தது. இருந்தாலும் அவரது முகத்தில் நிம்மதியும் அமைதியும் தென்பட்டது.
இது குறித்து பேசிய அவர், மனைவியால் துன்புறுத்தப்பட்டதாகவும், தனது திருமண வாழ்க்கை என்னும் நரகத்திலிருந்து வெளியே வந்த பிறகு இப்போது நிம்மதியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.




