ஹார்முஸ் நீரிணையை கடக்க இந்தியா உட்பட 6 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கிய நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை. எங்களுக்கு நட்பான நாடுகளுக்கு பாதுகாப்பான அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இதில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் வங்காளதேசம் ஆகியவை அடங்கும். சமீபத்தில் இந்தியாவின் இரண்டு கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றதையும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் சில வளைகுடா நாடுகள் தொடர்புடைய கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
மேலும், “நங்கள் போர் நிலையில் இருக்கிறோம், இந்த நிலையில் எதிரிகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கவேண்டிய அவசியம் இல்லை” என அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்த முடிவால், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து 95 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கமாக தினசரி 120 கப்பல்கள் கடந்து செல்லும் நிலையில், மார்ச் 1 முதல் 25 வரை மொத்தமாகவே வெறும் 155 கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றுள்ளன.
இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை, விலை உயர்வு, வணிக தடைகள் போன்றவை காணப்படுகின்றன.
இந்தியாவிற்கு ஹார்முஸ் நீரிணையை திறந்திருப்பது, எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு மிகப் பெரிய ஆதரவாக இருக்கும்.
உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின்போது, இந்தியா நட்பு நாடு என ஈரான் அறிவித்திருப்பது, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.




