ஏற்கெனவே இரண்டு LPG கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் நிலையில், மற்றொரு எண்ணெய் கப்பல் சவுதியிலிருந்து புறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெறும் ஈரான் போரின் தாக்கத்தால், இந்தியாவில் எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதை சமாளிக்க, MV Jag Vasant மற்றும் MV Pine Gas எனும் இந்திய கோடியை ஏந்திய இரண்டு LPG கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) புறப்பட்டு, ஹார்முஸ் நீரிணையை அனுமதியுடன் கடந்து இந்தியாவிற்கு வந்துகொண்டு இருக்கின்றன.
அவற்றில் ஒன்று மார்ச் 26-ஆம் திகதி கண்ட்லா துறைமுகத்துக்கும், மற்றொன்று மார்ச் 28-ஆம் திகதி நியூ மங்களூர் துறைமுகத்திற்கும் வரவுள்ளன.

இந்த இரு கப்பல்களிலும் மொத்தமாக 92,619.59 மெட்ரிக் டன் LPG கொண்டுவரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரு வணிக கப்பல்களுக்கும், இந்திய கடற்படை தனது போர்கப்பல்களை அனுப்பி 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
மற்றொரு பக்கம், MT Kallista எனும் எண்ணெய் கப்பல் சவுதி அரேபியாவின் யன்பு துறைமுகத்தில் எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியாவின் பரதீப் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவை அனைத்தும் இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்திசெய்யும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஆனால், ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC)இந்திய போர்கப்பல்களுக்கு ஹார்முஸ் நீரிணையில் நேரடி பாதுகாப்பு வழங்க அனுமதி மறுத்துள்ளது.
இதனால், இந்திய கடற்படை கல்கத்தா வகை போர்கப்பல்களை களமிறக்கி, ஓமன் வளைகுடா மற்றும் ஏடன் வளைகுடா வழியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்கிறது.




