எண்ணெய் என்றால் உலகிற்கு நினைவிற்கு வரும் பிரதேசமாக வளைகுடா நாடுகள் இருந்தாலும், தற்போது அங்கு ஆபத்தில் இருப்பது எண்ணெய் அல்ல.
வளைகுடாவின் உண்மையான உயிர்நாடிக்கு இப்போது பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. அது தான் குடிநீர்.
ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளின் கடல்நீரை குடிநீராக்கும் (Desalination) நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஈரான், தனது மின் நிலையங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், வளைகுடா பிரதேசத்தின் முக்கியமான எரிசக்தி மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் சட்டப்பூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என்றும் அவை மீளமுடியாத வகையில் அழிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இது ஐக்கிய அரபு அமீரகம், சவுத் அரேபியா, கத்தார் போன்ற நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். ஏனெனில் இந்த நாடுகள், கடல்நீரை குடிநீராக்கும் உப்பு நீக்க நிலையங்களை பெரிதும் நம்பியுள்ளன.
இயற்கையான நன்னீர் வளங்கள் அங்கு மிகக் குறைவாக உள்ளதால், உப்பு நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அப்பகுதியில் அன்றாட வாழ்க்கையின் முதுகெலும்பாக கருதப்படுகின்றன.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. ஆனால், ஈரான் அங்கு கப்பல் போக்குவரத்தை நிறுத்தியதால், நூற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. இதனால், உலகளாவிய எரிசக்தி சந்தியில் பெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக, பஹ்ரைன் மற்றும் சில பகுதிகளில் உள்ள சில உப்பு நீக்க நிலையங்கள் ஏற்கெனெவே சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பல கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இந்த சூழ்நிலை, எண்ணெய் மட்டுமல்லாமல், குடிநீரும் வளைகுடா நாடுகளின் உயிர்நாடியாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் பாதிக்கப்பட்டால், அங்கு வாழும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் உபாயம் உள்ளது.




