உலக நாடுகள் இரண்டின் தலைவர்கள் சந்தித்துக்கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்? அரசியல் பேசுவார்கள், மிஞ்சிப்போனால், தனிப்பட்ட முறையில் குடும்பத்தினரின் நலம் விசாரிக்கலாம்.
ஆனால், உலகத் தலைவர்கள் இருவர் இந்தியத் திரைப்படம் ஒன்று குறித்து பேசிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
உலக தலைவர்களின் கவனம் ஈர்த்துள்ள திரைப்படம்

சமீபத்தில், பின்லாந்து ஜனாதிபதியான அலெக்சாண்டர் ஸ்டபும், கனேடிய பிரதமரான மார்க் கார்னியும் காலைப்பொழுதில் உடற்பயிற்சிக்காக ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போது, மார்க் கார்னி, அலெக்சாண்டரிடம், இந்தியாவில் உங்கள் இன்ஸ்டா கணக்குக்கு வரவேற்பு எப்படி உள்ளது என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த அலெக்சாண்டர், நான் துரந்தர் திரைப்படம் பார்த்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து, எனது இன்ஸ்டா கணக்குக்கு பயங்கர வரவேற்பு என்று கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் துரந்தர் திரைப்படம் குறித்து பேசிக்கொள்ளும் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இந்நிலையில், ஒரு பேட்டியின்போது, தன் மகன் தன்னிடம் துரந்தர் திரைப்படம் பார்க்குமாறு கூறியதாகவும், இந்தியா செல்வதற்கு முன் தான் அந்த திரைப்படத்தை பார்த்ததாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தனக்குப் பிடிக்கும் என்றும், துரந்தர் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தைக் காண ஆர்வமாக இருப்பதாகவும் பின்லாந்து ஜனாதிபதியான அலெக்சாண்டர் கூற, அந்த வீடியோவும் வைரலாகிவருகிறது.
இன்னொரு விடயம் என்னவென்றால், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் சமீபத்தில் இந்தியா சென்றுவிட்டு நாடு திரும்பும்போது, இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவின் பின்னணியிலும் துரந்தர் திரைப்பட பாடல் ஒன்று ஒலிக்க, இந்தியாவில் ஏற்கனவே பெரும் வசூலைக் கண்ட அந்த திரைப்படம் இப்போது உலக அளவில் பிரபலமாகிவருகிறது.




