அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ளவர்கள், வெளியேற இலவச டிக்கெட்டுடன், ரூ.2.40 லட்சம் பணம் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள்
அமெரிக்கா ஜனாதிபதியாக ட்ரம்ப் 2வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முன்னதாக ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனர். 2025 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சட்டபூர்வமான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவர்கள் பிடிபட்டு நாடு கடத்தப்படுவதற்குப் பதிலாக, தாங்களாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) “புராஜெக்ட் ஹோம் கமிங்” என்ற திட்டத்தைத் தொடங்கியது.
இந்தியாவிற்கு செல்ல இலவச பயணம்
தற்போது அமெரிக்காவில் சட்டபூர்வமான ஆவணங்கள் இல்லாமல் வசித்து வருபவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்லவோ அல்லது சட்டபூர்வ அந்தஸ்து உள்ள வேறுநாட்டிற்கு செல்லவோ இலவச பயண ஏற்பாடுகளை செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், இதன் மூலம் வெளியேறுபவர்களுக்கு 2,600 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.2.40 லட்சம்) உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவை விட்டு வெளியேறத் தவறினால் வழக்கமாக விதிக்கப்படும் அபராதங்கள் உட்பட, சில தண்டனைகளையும் இந்தத் திட்டம் தள்ளுபடி செய்யும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த பதிவில், தாஜ்மகால் படத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கு செல்லலாம் என அறிவித்துள்ளது. மேலும், சீனா, கொலம்பியா ஆகிய நாடுகளின் படங்களையும் இணைத்துள்ளது.
சட்டப்பூர்வ வழியில் திரும்ப வரலாம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோம், நீங்கள் இங்கு சட்டவிரோதமாக இருந்தால், நீங்களாகவே வெளியேறி, சொந்த ஊர் திரும்புவதற்கான நிதி உதவியைப் பெறலாம். இதற்கு CBP ஹோம் செயலியைப் பயன்படுத்துங்கள்.

நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அபராதம், கைது, நாடு கடத்தப்படுதல் ஆகியவற்றை எதிர்கொள்வீர்கள், மேலும் மீண்டும் திரும்ப ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.
இப்போதே சுயமாக நாட்டை விட்டு வெளியேறி, சட்டப்பூர்வமான, சரியான வழியில் திரும்புவதற்கான உங்கள் வாய்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறியுள்ளார்.




