ஈரானின் முக்கிய தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அவருடைய எக்ஸ் பக்கத்தில் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலிலே ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அலி காமெனி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
இதனையடுத்து, அலி காமெனியின் மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்சத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.
அலி லாரிஜானி கொல்லப்பட்டாரா?
இந்நிலையில், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNCS) செயலாளராக உள்ள அலி லாரிஜானியை(ali larijani) படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காமேனி உயிருடன் இருக்கும் போதே, தான் கொல்லப்பட்டால் ஈரானின் அரசியல் கட்டமைப்பை பாதுகாக்கவும், போர்க்கால செயல்களை நிர்வகிக்கவும் அலி லாரிஜானியை(ali larijani) தற்காலிக தலைவராக நியமித்ததாக தகவல் வெளியானது.

IRGCயின் நிறுவன உறுப்பினரான லாரிஜானி, ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பின் தலைவர், 2008 முதல் 2020 வரை நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
“ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தொடர் வஞ்சகமான தாக்குதல்கள் குறித்து இஸ்லாமிய நாடுகள் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது” என இஸ்லாமிய நாடுகளுக்கு லாரிஜானி கடிதம் எழுதியிருந்தார்.

இதில், “உதவி கோரும் சக முஸ்லிமுக்குத் தோள் கொடுக்காதவ முஸ்லிமே அல்ல’ என்பது நபியின் வாக்கு. ஆனால், எதிரிகளால் இந்த இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்ட ஈரானிய மக்களுடன் எந்த நாடும் துணை நிற்கவில்லை.
ஈரானைத் தாக்க அனுமதித்துவிட்டு, பதிலுக்கு அமெரிக்க தளங்களை தாக்கினால் எங்களை எதிரி என்பதா? ஈரான் வடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா? நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். பிராந்தியத்தின் எதிர்காலத்தை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா 11/9 இரட்டை கோபுர தாக்குதலை போல் ஒரு தாக்குதலை நடத்தி விட்டு பழியை ஈரான் மீது போட திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் IRGCயின் துணை அமைப்பான பாசிஜ் படைத் தளபதி குலாம்ரேசா சுலைமானியையும் படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லாரிஜானி எக்ஸ் பதிவு
கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், அலி லாரிஜானியின் எக்ஸ் (X) கணக்கில், அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது லாரிஜானி உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த வெளியிடப்பட்ட பதிவா அல்லது முன்னதாகவே எழுதி வைத்துள்ளதை தற்போது வெளியிட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இல்லை.
ஆனால், ஈரான் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.




